அப்பப்பா நட்புக்களின் தொடர் இடுகைக்கான அழைப்புகள் எங்கு பார்த்தாலும், புதிது புதிதாக, மகிழ்ச்சியாக இருக்கிறது, எல்லோருடைய நல்ல மனங்களையும் அறியமுடிகிறது, திருமதி. மேனகா சதியா இந்த தேவதையை எனக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதோ எனது பத்து ஆசைகளை பகிர்ந்து கொள்கிறேன், இவை யாவுமே நம்மால் முயற்சி செய்து நிறைவேற்றக்கூடியவைகளே, ஆகவே தேவதைக்கு சிறிது ஓய்வு கொடுத்து, நாம் சற்று சிந்திப்போமே!!
- வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பக்குவம், நமது நட்புக்களிடம் நான் கண்டு மகிழும் அழகிய குணம், அது அனைவரிடத்திலும் இருந்தால் உலகம் அமைதி பூங்கா தான்.
- எனது பள்ளிப்பருவம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சி!! கிடைக்காது, ஆனால் இன்றைய பள்ளிப்பருவத்தில் இருக்கும் சிறார்கள் இந்த வாய்ப்பு கிடைக்காததற்க்கு வறுமை தான் பெரும்பாலும் காரணம், அந்த வறுமை ஒழிய வேண்டும்.
- மழை வந்தால், புயல், வெள்ளம் என திண்டாட்டம், இல்லையெனில் வறட்சி, பஞ்சம், இவற்றை உண்மையிலேயே புரிந்து கொண்ட அரசாங்கமும், இவற்றை சமாளிக்கக் கூடிய எதிர் நோக்கத்திட்டங்கள் கொண்ட மனிதர்களும்.
- புகை, மது, போதை இவை கேடு எனத் தெரிந்தும் உபயோகிப்பவர்கள், இந்த இடுகையை படித்ததும் கொடிய இந்த பழக்கங்களை விட்டு விட வேண்டும்.
- தற்பெருமை கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் வரவில்லை, நாளைக்கு பெரிய ஆளாகி விட்டால், அப்படி ஒன்று வேண்டாம் ஒரு பொழுதும்.
- கண்ட இடத்தில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, இது போன்ற பொது இடங்களை நாசமாக்குவோர் இப்பொழுதே திருந்த வேண்டும்.
- வேலை வாய்ப்பு பெருக வேண்டும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதவர்களும், வாய்ப்பிற்க்காக காத்திராது, வாய்ப்பை உருவாக்கி உழைப்பவர்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.
- காசுக்காக மட்டும் என்று ஆகிப்போன கல்வி, அதனை முன்னிறுத்தி பட்டாளமாய் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், சிறிது சிந்திக்க வேண்டும்.
- நேற்று வரை சாதாரண மனிதர்கள், அது ஏனோ அரசியல் அரியனை ஏறியவுடன் மனமாற்றம்!! பணப்புழக்கம் காரணமோ? அவர்கள் சிறிது மாறி நம்மையும் சிந்திக்க வேண்டும்.
- பிரச்னைகள் எதுவானாலும் நமக்குள் பேசியே தீர்போமே, எதற்க்கு மன உளைச்சல்? நல்ல நட்புக்கள்/உறவுகள் என்றும் தொடர வேண்டும்.